இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஆகஸ்ட், 2007

பத்துப்பாட்டு2 - Johnny Cash - என் காதலைத் தந்துவிடு


பத்துப்பாட்டு - இந்த வரிசையில் இரண்டாவதாக யாரை எழுதலாம் என்று நினைத்தவுடனேயே வேறு Dilemma இல்லாமல் நினைவுக்கு வந்தது ஜானி கேஷ் தான்.1960 களில் துடங்கி ஒரு அரையாண்டுக்கும் மேலாக Country Songs மற்றும் Rock இசையில் புகழ்பெற்றவர் ஜானி கேஷ். Country Songs எனப்படும் வகை நமது ஊர் கிராமத்து இசையுடன் சற்று சம்மந்தப்படுத்தி சொல்லலாம் (முழுமையாக அல்ல). அதிகம் சப்தமில்லாத எளிய இசையில், சாதாரண சொற்களைக்கொண்டு அமைக்கப் படும் Country Songs இசைக்கு Rock, Hip-Hop,Jazz எல்லாம் கடந்து இன்றும் ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருந்து வருகிறது.

கேஷ் அமரிக்காவைச் சேர்ந்தவர். தனது 50 வயது இசை வாழ்கையில் 50 மில்லியன் ஆல்பங்களுக்கும் மேலாக விற்றுத்தீர்த்த இந்த இசையுலக ஜாம்பவான், இசை வரலாற்றில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். பெரும்பான்மையான கேஷின் பாடல்கள் அடிப்படை மக்களுடைய சோகம், தீர்க்க முடியாத துக்கம், ஆற்ற முடியாத கவலையை உட்பெற்றதாகவே இருக்கும். ஒரு மிகசாதாரணமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கேஷ், அவரது இளமைப் பருவங்களில் அனுபவித்த போராட்டங்களும் துக்கங்களுமே தனது பெரும்பான்மையான பாடல்களுக்கு ஊக்குவிப்பாய் இருந்ததாய் தெரிவித்திருக்கிறார்."Hey Porter" "Cry Cry Cry" என்ற பாடல்களுடன் துடங்கிய இவரது இசையுலக பிரவேசம் "Dont Take your guns to Town" என்ற ஒற்றைப் பாடல் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றார்.

போதைப்பழக்கத்தின் காரணமாக முறிந்த விவியன் லிபர்தோ-வுடனான‌ இவரது முதல் திருமண வாழ்கையை இரண்டு வருடங்கள் கழித்து அப்போது பிரபலாமாக அறியப் பட்டு வந்த பாடகியும், பாடலாசிரியருமான ஜூன் கார்ட்டருடன் துடங்கினார்.

தன் பாடல்கள் பிரபலாகத் துடங்கியிருக்கையில் போதையின் பிடியிலானார் ஜானி கேஷ். ஒளித்து வைக்கப் பட்ட போதை மாத்திரைகளை, வைத்த் இடம் மறந்தவராக தனது அறை நண்பர்களே திருடிவிட்டதாக கூறித்திரிந்தார். இதனாலே தன் நண்பர்கள் மத்தியில் கேலிக்குள்ளானார். 1970 களில் போதைப் பழக்கத்திலிருந்து விடுபெற்று கிறித்துவத்தில் நாட்டம் காட்டத்துடங்கினார் கேஷ். பின்னாளில் Ring Of Fire என்ற பாடலில் தனது போதைப் பழக்கத்தைக் குறித்து தான் ஒரு தீ வளையத்தினுள் மாட்டிக்கொண்டதாகப் பாடுகிறார்.

மிதமிஞ்சிய போதையில் அவரது நடவடிக்கைகள் மிக வேடிக்கை நிறைந்ததாக இருந்தது. 1965தில் அதிக போதையில் ஒரு முறை ஒரு சரணாலயம் வழியாக தனது ட்ரக்கை ஓட்டிச்சென்று காரின் ஒரு பகுதி பற்றிக்கொள்ள, காட்டினுள் விட்டுவிடுகிறார். அதில் பற்றத் துடங்கிய தீயில் சுமார் 100 ஏக்கர்கள் நாசமாயின. "ஏன் இப்படிச் செய்தீர்கள்" என்ற நீதிபதியின் கேள்விக்கு. "இதை நான் செய்யவில்லை...மாறாக எனது ட்ரக்கே செய்தது. அதுவும் அங்கேயே எரிந்து செத்துவிட்டது, அதனால் அதனிடம் நீங்கள் கேட்க முடியாது" என்று தெனாவெட்டாக பதில் சொன்னார். இவ்வாறு பலமுறை அவர் சிறைக்கு சென்றிருக்கிறார், ஆனால் அச்சிறைவாசம் அவருக்கு ஒரு நாளுக்கு மேல் நிலைத்ததில்லை. காரணமற்று அவருக்கு சிறைக்கைதிகள் மீது ஒரு மெல்லிய அன்பு இருந்து வந்தது. அப்போதைய அமரிக்காவின் ஜனாதிபதி நிக்ஸனின் நண்பராக அறியப்பட்ட கேஷ், சிறைக் கைதிகளின் மறுவாழ்வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

பாடலெழுதுவது, பாடுவது, இசைஅமைப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துவது, சினிமாப்படம் எடுப்பது என்று தன் கலை வெளிப்பாட்டில் Ironicalலாக இருந்தவர் கேஷ். தான் எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாரோ அப்படியே வாழ்ந்தார் கேஷ். எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாரோ அப்படி மட்டுமே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வு இவ்வளவு கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்ததாக இருக்க முடியுமா என்று கேட்டால்...சாருநிவேதிதா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது."பொய்யாக வாழாத எல்லா வாழ்விலும் கேளிக்கைக்கும் இன்பத்திற்கும் குறைவே இருக்காது" என்பார்.

ஜூன் கார்ட்டருடனான வாழ்வு அவருக்கு சற்றே சமாதானத்தை அளித்திருக்க வேண்டும். இல்லையேல் 30 வருடங்களுக்கு மேலாக அத்தம்பதி வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. 1997-98 ஆண்டுகளில் நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களுக்காகவும், சர்க்கரை நோயாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் உடல்நிலை வெகுவாக பாதிக்கப் பட்டது. ஜூன் கார்ட்டர் 2003ம் ஆண்டு இறுதைய நோயால் இறந்துபோனார். அவள் "தொடர்ந்து இசைக்க வேண்டும் என்று" கேட்டுக்கொண்டபடியே தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார் கேஷ்.
ஜூன் கார்ட்டர் மறைந்து 4 மாதங்களுக்குள்ளாக சுவாச சம்மந்தப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது 71வது வயதில் அந்த இசைஞன் பிரபஞ்சப் பாடலில் தன்னை கலந்து விட்டுச்சென்றான்.

இதோ நான் மிகவும் விரும்பும் ஜான் கேஷின் இந்தப்பாடலும் கூட ஒரு சிறைக்கைதியின் காதலைப் பாடுகிறது:



என் காத‌லைத் தந்துவிடு
-----------------------------------------‌
இந்தக் காலைப் பொழுதில் ர‌யில்பாதையின் ஓர‌ம் அவனைக்க‌ண்டேன்
அவன் ஏதோ முணுமுணுத்தபடியிருந்தான்
செத்துக்கொண்டிருக்கும் அவ‌னின் க‌டைசி வார்த்தைகளுக்காக செவி சாய்த்தேன்
அவ‌ன் சொல்ல‌த்துட‌ங்கினான்:

"என்னை ஃபிரிஸ்கோ சிறையிலிருந்து விடிவித்தார்கள்
பத்துவருடம் என் கருமங்களுக்கு பலன் கிடைத்துவிட்டது
நான் லூசியானோவிற்க்கு சென்றுகொண்டிருந்தேன்
என் ரோசைப் பார்ப்பதற்கும் என் மகனை தெரிந்துகொள்ளவும்

"என் காத‌லை என் ரோசிட‌ம் நீ சேர்த்துவிட‌ மாட்டாயா? பாத‌சாரியே...
என் பணம் முழுவதையும் அவளுக்காக எடுத்து செல்வாயா?
அதைக்கொண்டு அவளை சில நல்ல துணிகளை வாங்கிக்கொள்ளச் சொல்
என் மகனிடம் சொல்வாயா...
உன் தந்தை உன்னை எண்ணிப் பெருமைப் படுகிறான் என்று..

க‌டைசியாக‌ ரோசிட‌ம் என் காத‌லையும் தந்துவிடு பாத‌சாரியே..."

எனக்காக காத்திருந்தமைகாக அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு
என் மகனை அம்மாவிற்கு உதவியாய் இருக்கச் சொல்
எனது ரோசை வேறொறு வாழ்வைத் தேடிக்கொள்ளச் சொல் பயனியே...
என்ன நான் சொல்வது சரி தானே...
இல்லையேல் அவள் தன்னந்தனியாய் தன் காலத்தை கழிக்க வேண்டியிருக்குமே...

இதோ என் காசுப்பை முழுக்க இதோ...
இருந்தும் அவர்களுக்கு இது வெகுநாள் நீடிக்காது
இந்த காலையில் என்னை நீ கண்டதற்காக நீ ஆசீர்வதிக்கப்படுவாய் தோழனே

க‌டைசியாக‌ ரோசிட‌ம் என் காத‌லையும் தந்துவிடு பாத‌சாரியே...
என் காத‌லைத் தந்துவிடு "


மெல்லிய ஒற்றை கிட்டார் இசையுடன் ஒலிக்கும் இந்தப் பாடல், சொல்லாத சோகங்களை ஏந்திச் செல்கிறது. ஏனோ பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்த பாதசாரி ரோசை சந்தித்திருக்க வேண்டும் என மனம் தன்னையறியாமல் பிராத்திக்கிறது. இதுவரைக் கண்டிராத ரோசின் மீது மனம் இரங்குகிறது. காதலைக் காட்டிலும் சிரமமானது காதலை வெளிப்படுத்துதலும், அதை சரியாக புரிந்துகொள்ளுதலுமே ஆகும். வெளிப்படுத்த முடியாத காதலின் சோகப் படிமனாக அமைந்துள்ளது இப்பாடல்.

பல பல தேசங்களில் வ‌ருட‌ங்க‌ளைக் க‌ழிக்கும் சிறைக்கைதிக‌ளின் குடும்ப‌ங்க‌ள் கார‌ண‌ம‌ற்று துன்பப் ப‌ட்ட‌வ‌ராக‌த்தான் இருக்கிறார்க‌ள். ஒவ்வொரு போரிலும் பெண்க‌ளும் குழந்தைக‌ளுமே மீண்டும் மீண்டும் நிர‌ந்த‌ர‌மாக‌ தோற்க‌டிக்க‌ப் ப‌டுகிறார்க‌ள் . போருக்கு பிந்திய வ‌ன்முறைக‌ள் ஆனாலும் ச‌ரி, ச‌க‌துணைவ‌னை இழ‌ந்த‌ குடும்ப‌வாழ்வானாலும் ச‌ரி. இதை பிரதிபலிக்கும் விதமாக, பற்பரிநாமத்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜானி கேஷ்.


புதன், 8 ஆகஸ்ட், 2007

பத்துப்பாட்டு1 - த‌னிமையாள‌ன் by AKON

AKON (Mr.Lonely) - த‌னிமையாள‌ன்

'பத்துப்பாட்டு'ன்னு சொன்ன உடனே பதறியடிச்சுறாதீங்க...

எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாது. இது நான் அடிக்கடி கேட்கும் பத்து இசைக்கலைஞர்கள் பற்றிய குறிப்பும், அவர்களது மிகப்பிடித்த பாடலின் அலசலும்...அவ்வளவே. மற்றபடி இவர்களை நமது இசைக் Copier களுடன் (Composer-கள் அல்ல‌) நிலைதூக்கிப் பார்க்கவோ, அல்லது அவர்களது அப்பட்டமான ஈ அடிச்சான் காப்பிகளை தோலுரிப்பதோ என‌து நோக்கம் அல்ல‌.

Frankly Speaking எனக்கு நல்ல ஆங்கிலப் பாடல்கள், இசைஞர்கள் Mc. Rajan மூலமாகவும், Mary Pearl மூலமாகவும் தான் அறிமுகம். Mc. Rajan அறைக்கு செல்லும் போதெல்லாம் 'உனக்குப் பிடிக்கும் பாரேன்'ன்னு பல‌ பாடல்களைப் போட்டுக் காட்டுவான்.Mary திடீரென்று குறுஞ்செய்தி அனுப்பி இந்த பாட்டு அந்த டி.வி-ல ஓடுது பாத்தியா என்பாள். சில நேரம் பாடலை ஒலிபரப்பவிட்டு செல்பேசியில் கவனிக்கசெய்வாள். இசை ரசனையில் பால்பேதம் இருக்க வாய்ப்பில்லை என்று நான் realize செய்தது அவர்களிடம் தான். கொச்சையாக பெண்களை மையப்படுத்தி வையும் சில‌ Rap பாடல்கள் கூட அவளுக்கு பிடித்திருக்கிறது, என்பது அதிர்ச்சியடயவைக்கும் அவளது முதிர்ச்சியயைக் காட்டுகிறது. அவர்கள் பரிந்துரைத்ததில் பல காட்டுக்கத்தல்கள், கடுமையான கெட்டவார்த்தைப் பாடல்கள், உருக்கும் மெலடிகள் எனப் பலதும் இருக்கும். அதில் எனக்கு மிக நெருக்கமான பாடல்களையே கேட்கிறேன்.

முதலில் Akon. இவரது முழுப் பெயரை எழுதவேண்டுமானால் கண்டிப்பாக நமது school register -களிளோ அல்லது அலுவலக படிவத்திலோ இடம் பத்தாது. முழுப்பேர் "Aliaune Damala Bouga Time Puru Nacka Lu Lu Lu Badara Akon Thiam". அதாவது ஒரு நெரிசலான செனகல் தெருவில் இவரை அப்படியே பேர் சொல்லி அழைத்தால், "என்ன சார்... கூப்பிட்டீங்களா ன்னு" ஒரு பத்துபேராவது திரும்பிப்பார்க்கக் கூடும். எதற்கு வம்பு... நாம் Akon என்றே அழைப்போம்.




செனகல் நாட்டில் 1973ல் பிறந்த இவர், 2004ம் ஆண்டு வெளிவந்த Locked Up இசைக் கோர்வையால் (Album) உலகுக்கு அறியப்பட்டார். பின் வெளிவந்த Konvicted இசைக்கோர்வைக்காக உலகில் இசைக் கலைஞர்களால் சிம்மசொப்பணமாகக் கருதப்படும் Grammy விருதைப் பெற்றார். அமரிக்காவின் Billboard Hot 100 வரிசையில் இவரது 18 ஹிட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் Billboard Hot 100 வரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் ஒருங்கே 2 முறை பிடித்த பெருமை இவரை மட்டுமே சாரும்.

எனக்கு Akon-னில் மிகவும் பிடித்தமானது அவரது முதல் இசைக்கோர்வை Trouble லில் வந்த Lonely பாடல்.

பொதுவாகவே Akonனின் பாடல்கள் ஒரு மெல்லிய சோகத்தையும், ஆற்றவியலா துயரத்தையும் கொண்டே இருக்கும். தனது பிரிந்து போன காதலியின் துயரம் தாளாது அரற்றும் இந்த Lonely பாடல், காதலர்கள் உலகில் காலங்கள் கடந்து நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும், நம்ம ஊர் "காத்திருந்து...காத்திருந்து..." போலவோ அல்லது "ராசாத்தி உன்ன..." போலவோ.

(இது அந்தப் பாடலின் தமிழ் Version
நல்லா இருந்தா தமிழாளுமை... Not upto the Mark ன்னா சோதனை முயற்சி)

த‌னிமையாள‌ன்
------------------------

நடு நிசியில் விழித்துப் பார்த்தேன்
என்னருகில் நீயில்லை
கனவில்லை என்று நம்ப முடியாமல்
நடக்கத் துடங்கினேன்

புலம்பக்கூட யாருமின்றி என்னுள் நானே கதைக்கிறேன்
உனைச் சரணடைய என்ன புரியலாமென்று நினைக்கிறேன்

எல்லாம் சரிசெய்யவே நினைக்கிறேன்
ஏனெனில்...நீ சென்ற பின்னே வாழ்கை
நின்றே விட்டதடி பெண்ணே !

நானொரு த‌னிமையாள‌ன்.
என்னவளென்று எண்ணிக்கொள்ள
யாரிருக்கிறார் சொல்
நீ விலகிய‌ என் வானில் ஏதடி அழகு
நீ இன்றி அமையாது என் உலகு !

என் கனவில் பெட்டகமாய் ஒரு பெண்ணிருந்தாள்
நான் க‌டிந்த‌ போதும், ஒடிந்து விடாத‌ ம‌ல‌ர‌வ‌ள்
அவ‌ள் என்னை வில‌கி ஒளிந்து விடுவாள்
அவ‌ளைத்தேடி நான் தெருவோர‌மாக‌ அலைவேன்
என்ப‌தை என்னால் க‌ற்ப‌னை கூட‌ செய்ய‌ முடிய‌வில்லையே !

என்னை மகிழ்ச்சியில் திணற வைத்தவளே
இன்று அரற்ற வைத்துவிட்டாயே...
இனி உன்னை ஒரு நோடி நேர‌ம் பிரிந்தாலும்
என் உயிர் க‌டிகார‌ம் ஓடாது!

உன் விளையாட்டு போதும் பெண்ணே - வந்து
வீடு சேர‌டி க‌ண்ணே!!!

நானொரு த‌னிமையாள‌ன்.
என்னவளென்று எண்ணிக்கொள்ள
யாரிருக்கிறார் சொல்

நீ விலகிய‌ என் வானில் ஏதடி அழகு
நீ இன்றி அமையாது என் உலகு !

- என்று புலம்பித்தள்ளுகிறார்.

என்ன காட்டுக்கத்தல்களுக்கு நடுவேயும் ஏகோனின் பாடல்கள் மெல்லிய மெலடியை தன்னகத்தே கொண்டிருக்கும். அனைவரும் சென்று விட்ட அலுவலக பொழுதுகளில் முழுஓசையுடன் lonely இசையையே கேட்க விரும்புகிறேன். அது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

Mc.Rajan "இந்தப் பாடல் அப்படி ஒன்னும் Special கிடையாது... ஒருவேளை இந்தப் பாடுக்கும் உனக்கும் நிறைய ஒத்துப் போதல் இருகிறதால உனக்கு Specialla பிடிக்குதோ என்னவோன்னு" கலாய்க்கிறான். ஆனால் அப்படியொன்றும் இல்லை

நீங்க வேனும்னா கீழே கொடுத்துள்ள Link கில் போய் Lonely கேட்டுப்பாருங்க.

http://www.youtube.com/watch?v=wWMWRWYJqfg

ஒரு வேளை நீங்களும் அப்படிச் சொன்னால்...
வேற வழியில்லை...
ஒத்துக்கத் தான் வேனும்.