இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 பிப்ரவரி, 2014

போய்வாரும் ஆசானே!



தலைமுறைகள் படம் பார்த்துவந்த இரவு ஒரு மணியளவில் பாலுமகேந்திராவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அது இவ்வாறு துடங்கியது: "I am one of the unfortunate son of yours who couldn’t learn cinema from you directly". அன்று இரவு ஒரு திருப்திகரமான திரைப்படம் பார்த்த அமைதியில் உறங்கப்போவதாக அதில் குறிப்பிட்டிருந்தேன்.

மேலும் அதில்…”வாழ்தலின் மூலம் மட்டுமே சாத்தியப்படும் வாழ்வின் அரிய தருணங்களை திரையில் கொண்டுவர ஒரு நேர்த்தியான ஆசானால் தான் முடியும். எவ்வளவு அழகான தருணங்கள், அவ்வளவு எளிமையாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கதை என்பதைக்கடந்து திரைமொழியின் சாத்தியம் என்பதற்கான உதாரணம் உங்கள் படங்கள். ஒரு படத்தை எடுத்துக் காண்பிப்பதைவிட சினிமாவை கற்பிக்க வேறு என்ன சிறந்த வழியிருக்கிறது? “இதோ பார்த்துக்கொள்....இப்படித்தான் எடுக்கவேண்டும்!” - அப்படித்தான் இருந்தது ‘தலைமுறைகள்’”

என் அஞ்சல் வாசிக்கப்பட்டதா என்பது எனக்கு தெரியாது. இனி யாராலும் திறக்கப்படாத அந்த மின்னஞ்சலில் அவரின் நீண்ட ஆயுளுக்காக பிராத்திப்பதாய் எழுதியிருந்தேன்". காலத்தின் முன் நமது பிராத்தனைகள் எவ்வளவு அர்த்தமற்றவை.

சொல்லப்போனால் ஒரு தலைமுறைக்கு சினிமாவை எப்படி பார்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் பாலுமகேந்திரா.

இன்றும் என் கேமாராவின் eye-piece வழியாக பார்க்கும் பொழுதும் அந்த ஒளியின் ரசனையும் 'இது அழகு' என்ற அழகியல் ப்ரக்ஞையும் பாலுமகேந்திரா அளித்ததே. ஒரு கட்டத்தில் அவர் பள்ளியில் சேர்ந்து சினிமா பயில வாய்பிருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாது போனது எங்களுக்கு....ச்சே!! எவ்வளவு துரதிஷ்டமான பிள்ளைகள் நாங்கள்..!!