இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 மே, 2008

புரட்சிக்கு அப்பால் !

இன்று :
மணி 9.00
நல்ல மழை... தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அவன் வீட்டிற்கு எப்போதும் நடந்து செல்வதே வழக்கம். இன்று ஷேர் ஆட்டோவில் ஏற வேண்டியதாயிற்று. ஏற்கனவே ஒரு 9 பேர் இருப்பார்கள். ஆண்கள் பெண்கள் பேதமற்று வெறும் மாமிச மூட்டைகள் போல எல்லோரும் திணித்துக்கொண்டிருந்தனர். அவன் சென்னை ஷேர் ஆட்டோ வில் பெண்களுடன் பயணித்தது போல தன் காதலிகளுடன் கூட அவ்வளவு நெருக்கத்தில் பயணித்ததில்லை. நடந்து போய்விடலாம் என்று சொன்னாலும் நண்பன் கேட்பானில்லை. வீட்டருகே வந்ததும் ஆட்டோக்காரர் ஆளுக்கு பத்து ரூபாய் தருமாறு சொன்னான்.

நண்பன் வழக்கமாக 5 கொடுப்பது தான் வழக்கம் என்றான். அவனிடம் சொற்போர் புரிவதாகிவிட்டது. மழ பேஞ்சா 10 ரூபா, கலவரம்னா 50 ரூபா...அடிபட்டு கெடந்தா சொத்தெழுதிக் கேப்பீங்க...போ யா போ... மத்தவனோட கஷ்டத்துல திங்கோனும்னு நெனைக்கர இல்ல... நல்லா இருப்ப.. போ என்றான். ஏதோ தமிழ் சினிமாவில் வரும் கிளிஷே காட்சிபோல இருந்தால் மன்னிக்கவும். அப்படி அவன் நடந்துகொள்வதாக முன் ஏற்பாடு ஏதுவுமில்லை. அதற்கு ஆட்டோக்காரன் எப்படி நடந்துகொண்டிருப்பான் சொல்ல வேண்டியிருக்காது. அதற்குள் நண்பர் மாப்பி

அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். மக்களின் இக்கட்டான சூழ்நிலையை காசாக்கும் இவன் மிகக் கொடூரமாணவனாக தெரிந்தான். அவசர காலங்களில் தனது தேவை அவசியம் என்று தெரியும் போதுதானே அவனுடைய உண்மையான ஊழியத்தை காட்டவேண்டும். சமீபத்தில் வாகன விபத்தை சந்தித்த ஒரு நண்பனை ஒரு ஆட்டோக்காரர் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்து, வீட்டிற்கும் அறிவித்து விட்டு ஒரு காசும்
வாங்காமல் சென்றுவிட்டார். இலவசமாக உழியம் செய்யாவிட்டாலும் கிடக்கிறது, குறைந்தபட்சம் ஞாயமானமுறையிலாவது நடந்துகொள்ளலாம் இல்லையா?" என்றெல்லாம் மாப்பியிடம் புலம்பியபடி வந்தான்.

நண்பர் "உடுங்க...உடுங்க " என்றே சொல்லிக்கொண்டு வந்தார். சாலையில் எல்லோரும் அவன் ஏதோ போதையில் கலாட்டா செய்யும் தோரணையுடன் பார்க்கிறார்கள்.

நண்பர் அவனை Eccentric என்றான்.

*--------------------*

இரவு மணி 10.00.

நேற்று இதே நேரம் இருக்கும். அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை அவிழ்த்திருப்பேன். இன்று இரவு உறக்கம்
விழித்து இதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். படித்து முடிக்கப்பட்ட அந்த புத்தகம் மாமிசம் உண்டு படுத்துக்
கிடக்கும் ஒரு வெற்றிப்புலியைப் போல என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் இவ்வளவு வேகமாக எந்த

புத்தகதையும் படித்ததில்லை. தோழர் கௌதம், நண்பர் எம்.எஸ், தோழி அனு எல்லாம் ஒரு இரவில் ஒரு 300
பக்க நாவலையும் வாசித்து விடுவார்கள். எப்போதும் என்னுடைய வாசிப்புவேகத்தை அவர்களிடம் கூறி
குறைபட்டுக் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நான் அசுர வேகத்தில் ஒரு இரவில் இதைப் படித்து முடித்ததன்
காரணம் எனக்கே விளங்கவில்லை. மேற்கூறிய சம்பவத்துடன் சேர்த்து இன்றைய‌ நாள் முழுவதும் என்னை ஏதோ
நிம்மதியற்று இருக்கச் செய்தது. மிகச்சிறிய காரணங்களுக்காக நண்பர்களிடம் கடுமையாக பேசினேன். காரணமற்ற
கோபமும்,தீராக்கவலையும் என்னைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தன. யவரிடமும் பேச பிடிக்கவில்லை.
இப்படி Chain reaction போல ஒரு பாதிப்பை ஏற்படுத்திய அந்த புத்தகம் க்யூபன் புரட்சியாளன் சேகுவேரா
வாழ்வைப் பற்றியதாகும்.

திடீரென்று சுற்றியிருக்கும் குற்றங்களெல்லாம் சுர்ர்ர்ர்ரென்று உரைக்கத்துடங்கின. சமூகத்தின் பல செயல்கள்
மீது நாம் சாதிக்கும் மௌனத்தின் அர்த்தம் பிடிபடவில்லை !.

*--------------------*

அர்ஜன்டினாவின் குளிர் கால வானின் கீழ் ஒரு பெண்மணி தனது பலவீணமான பிரியத்துக்குறிய
கைக்குழந்தையுடன் நடந்து கொண்டிருக்கிறாள். குளிர் கொள்ளவியலா அந்த குழந்தை நடுங்கத்துடங்குகிறது.

பதறிப் போன அவள் வீட்டிற்கு விரைகிறாள். மருத்துவர்கள் குழந்தைக்கு ஆஸ்த்துமா இருப்பதாக
சந்தேகிக்கிறார்கள். அக்குழந்தையின் நிலைக்கு தானே காரணம் என கவலையுறுகிறாள் அந்த தாய். அக்குழந்தை
படும் துன்பம் யாவும் தன்னாலே தான் என கற்பிதம் கொள்கிறாள். அவனது எதிர்காலம் பற்றி கவலை
கொண்டவளாகவே இருக்கிறாள். அந்த பலவீணமான மகன் அன்னையின் நீங்கா அரவணைப்பிலேயே வளர்கிறான்.
10 வயதிருக்கும்... அவன் தாயிடம் எதோ அரசியல் பற்றிய சந்தேகத்தைக் கேட்க அவனை அடுப்படியில்
அமரவைத்து தனது அரசியல் அறிவையும் உணவுடன் சேர்த்து புகட்டுகிறாள். அச்சிறுவன் அதன் எதிர்கால
முக்கியத்துவம் தெரியாமல் அன்னையிடம் உபதேசம் பெற்றுக்கொண்டிருக்கிறான். இப்படித் துடங்குகிறது தோழர்
சேகுவேராவின் வரலாறாய் மாறிப்போன வாழ்கை.

நான் சேகுவேராவின் சரித்தரத்தை பற்றியோ, சாகச வாழ்வைப் பற்றியோ, தியாகத்தைப் பற்றியோ எழுத
முனையவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. (ஏற்கனவே கூகிள் தேடியந்திரத்தில் 'சேகுவாரா' என்று
தட்டச்சினால் 11,800 இணைய பொருந்துதல்கள் வருகிறது.

இந்த புத்தகத்தை படித்து முடித்த ஒரு நண்பன் இரவு நாள் 11 மணிக்கு செல்பேசியில் அழைத்து ஒன்றரை
மணிநேரம் தனது வியப்பையும் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
மற்றுமொரு நண்பன் ஒரு வார இதழில் வெளிவந்த சே வின் இறுதி தொடரைப்படித்துவிட்டு ஒரு நள்ளிரவில் செல்பேசியில் அழைத்து "... சே அப்படி வாழ்ந்ததுக்கு..அவரை தக்க மரியாதயோட கொன்னிருக்கலாம்... ராணுவம் கைது செய்து வரும் புகைப்படத்தில் மரணம் அவர் கண்ணுல தெரியுதுங்க‌...தோத்துட்டம்னு ஒத்துகிட்டமாதிரி இருக்கு...வேணாம்... நமக்கு தெரிந்த சே ஒரு வெற்றிவீரனாகவே இருக்கட்டும்" என்றான். என்ன செய்வது நம்மவர்கள் எல்லாம் இப்படியே பூமனசுக்காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் 'சே' வின் மரணம் 'இல்லை'யென்று ஆகிவிடப்போகிறதா என்று நான் அவனை அப்போது கேட்டிருக்க முடியாது.

சரியாகப் பார்த்தால் சாதாரண பலவீணங்கள் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் தான் 'சே'. அவனது வாழ்விற்கு
சரித்திர முக்கியத்துவம் கொடுத்தது ப்ரத்யேகமாக ஒரு 10 வருடங்களே இருக்கும். தனது 28வது வயதில்
கிரன்மாவில் தனது எதிர்திசையில் வரும் வீரர்களைப் பார்த்து யாரென வினவுகிறார். "நாங்கள் க்யூபாவில்
ராணுவத்திற்கு எதிரான போரில் தோல்வியுற்று வருகிறோம். ஆனால் எங்களுக்கு கவலையில்லை நாங்கள்
கண்டிப்பாக வெற்றிபெறுவோம் " என்கின்றனர். ராணுவத்திற்கு எதிராக போர்புரிய இங்கு ஆள் இருக்கிறதா என்று
அவருக்கு குழப்பம். "உங்களை யார் வழிநடத்துவது" என்று கேட்கிறார். அவர்கள் "தோழர் ஃபிடெல் கேஸ்ட்ரோ"
என்று சொல்லி மறைகிறார்கள். கேஸ்ட்ரோ என்ற மனிதனின் மீது அளவுகடந்த பிரியமும் ஈர்ப்பும் ஏற்படுகிறது.

தன் அம்மாவிற்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகிறார் 'ஃபிடெல் என்னை ஈர்ததுவிட்டார். இனி அவர் வழிதான்
என்வழி. இனி எனக்கு வாழ்வானாலும் மரணமானாலும் அது ஃபிடலுக்காக தான்' என்று.
அனைவரையும் வசீகரித்த 'சே' வைக் கவர்ந்த ஃபிடலின் மீது 'சே' வைப்போல வெளிச்சம் படரவில்லை. அவர்
இன்னும் உயிருடன் இருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் ஃபிடல் ஒரு சிறந்த ராஜதந்திரி,
அரசியல்வாதி,ஒரு நிகரற்ற தலைவன் மற்றும் போராளி. க்யூபாவுடன் ஃபிடலின் தேடல் நின்று போனது.

பல்வேறு காரணங்களால் 'சே' க்யூபாவை விட்டு வெளியேறியதும், சுதந்திர வெளிச்சம் படாத தேசங்களுக்காக
போராடப் போவதாக அவர் பிரகடணப்படுத்திக்கொண்டதும் அவரை உலக அளவில் பிரபலப் படுத்தியது. அனைத்து
தேச மக்களும் தனக்காகவும் ஒரு நாள் 'சே' போராட வருவார் என்று நம்பினர், அவர்கள் 'சே' வை ஒரு
சகோதரன் போலவே எண்ணினர். ஃபிடல் அடைய முடியாத மக்களுடனான நெருக்கம் சே விற்கு சாத்தியப்பட்டது.

அவர் எழுதிய தனது கடைசி கடிதங்கள் மிகவும் குறிப்பிடித்தக்கதும், பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. ப்ரத்யேகமாக சொந்த மொழிப்பெயர்ப்பில் இவை:

குழந்தைகளுக்கு எழுதியது:
========================

"அன்புக் குழந்தைகளே,

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். ஞாயமாக சொல்லப்போனால் என்முகம் கூட உங்களுக்கு நினைவிருக்காதென்றே நினைக்கிறேன்.

உங்கள் தந்தை தன்னுடைய நம்பிக்கைகளின் வழி நடப்பவனாகவே வாழ்ந்தான். அவனது கொள்கைகளுக்கு மிக விசுவாசமாகவும் இருந்தான். நீங்கள் சிறந்த புரட்சியாளர்களாக வளருங்கள். தொழில்நுட்பத்தை கற்கவேண்டும். அதுவே இன்னல்களைக் களைய உங்களுக்கு உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சி தான் முக்கியம் குழந்தைகளே!. நாம் அனைவரும் தனியாளாக பிரியோஜனமற்றவர்கள்.

உலகில் எந்த மூலையில் யாருக்கேனும் தீமை நடந்தாலும், அவர்கலுக்காக வருத்தப்படுங்கள். அதுவே ஒரு புரட்சியாளனின் மிக அழகான குணாதிஸயம். இப்போதும் உங்களைக் காணவே ஆர்வமாக இருக்கிறேன். ஒரு நீண்ட முத்தத்துடன் உங்களை வாரி அனைத்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு அப்பா."

மூத்தவள் ஹில்திதாவுக்கு எழுதியது:
=================================

"மிகுந்த பாசத்திற்குரிய ஹில்திதா,

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கடிதம், உனக்கு வெகு தாமதமாக கிடைக்கும் என்பதை நான் அறிவேன்.


நான் உன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன் கண்ணே!. இன்றைக்கு உன்னுடைய பிறந்தநாள், நீ மிகவும் சந்தோஷமாகவே இருந்திருப்பாய் என நம்புகிறேன். நீ இப்போது பெரியவளாகிவிட்டாய், கிட்டத்தட்ட ஒரு இளங்குமரியாகி விட்டிருப்பாய். உனக்கு என் செல்லக்குட்டிகளுக்கு எழுதுவதைப் போல எழுதமுடியாது,
விளையாட்டாக...அற்ப விஷயங்களைப் பற்றி எல்லாம்.

உனக்குத் தெரியும் நான் வெகு தூரத்தில் இருக்கிறேன், இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது நம் எதிரிகளை எதிர்த்து. அதற்காக நான் பெரியதொரு செயலைச் செய்துவிட்டதாக சொல்ல மாட்டேன். ஆனால் நான்
உங்களை எண்ணி பெருமைப்படுவதைப் போலவே, உன் தந்தையும் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இருப்பேன் என்றே நம்புகிறேன்.

இன்னும் போராட்டம் பாக்கியிருக்கிறது. நீ பெரிய பெண்மணியானாலும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதற்கு உன்னைத் தயார்படுத்திக்கொள். உன் தாயின் சொல்படி கேள். நீ செய்யும் காரியத்தில்
சிறப்பாக வர எப்பவும் முயற்சி செய்.

உன் வயதில் நான் அப்படியெல்லாம் இருக்கவில்லை தான். ஆனால் நாங்கள் வாழ்ந்த சமுதாயம் வித்தியாசமானது. அங்கு மனிதனே மனிதனுக்கு எதிரியாக இருந்தான். அப்படி இல்லாமல் நீங்கள் வேறு ஒரு சூழ்நிலையில் வாழ ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு நன்றியாக இருங்கள்.

மற்ற குழந்தைகள் மீதும் உனது கவனத்தை வைத்துக்கொள். அவர்களை நன்றாக படிக்கவும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவும் அவர்களுக்கு அரிவுறைப்படுத்து கண்ணே!. அதிலும் அல்திதாவிடம் அதிகம் கவனம் செலுத்து. அவள் உன்மீது அதீத பாசத்தோடு இருக்கிறாள்.

சரி எனது சீமாட்டியே. மீண்டும் பிறந்தநாள் வாழ்துக்கள் உனக்கு. இன்று உன் தாயையும், ஜினாவையும் ஒருமுறை சென்றுபார். நாம் அடுத்த முறை பார்க்கும்வரைக்கும் நினைவுகொள்ளக்கூடிய ஒரு நீண்ட நெருக்கமான அடைப்புடன் விடைபெறுகிறேன்.

இப்படிக்கு அப்பா."

பெற்றோருக்கு எழுதியது:
=======================


"என் பிரியத்துக்குரிய முதியவர்களே!

மீண்டும் என் பாதங்களுக்கு அடியில் ரோசினேன்ட் குதிரையின் மெல்லிய எலும்புகளை உணர்கிறேன். எனது கேடையத்தை கையில் ஏந்தியபடி. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்பாக இதேபோல் ஒரு பிரிவுரை கடிதத்தை
எழுதினேன். அப்போது நான் வருத்தப்பட்டிருந்தேன் 'நான் சிறந்த போராளியகவோ, மருத்துவனாகவோ இருக்க லாயக்கில்லை என்று'. மருத்துவம் எனக்கு எப்போதும் ஆர்வமூட்டக்கூடியாதாக இருந்ததில்லை. ஆனால் இப்போது நான் அவ்வளவு மோசமான போராளி யொன்றும் இல்லை!.

ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை, முன்பைவிட சற்று விழிப்பாக இருக்கிறேன் அவ்வளவுதான். எனது மார்க்ஸியம் ஆழமானதாக மாறியிருக்கிறது. அது என்னைப் புனிதமடைய செய்திருக்கிறது. ஆயுதப்புரட்சி மட்டுமே தங்கள் சுதந்திரத்தை விரும்புபவர்களுக்கு ஒரே தீர்வு. நான் எனது நம்பிக்கைகளில் தெளிவாக இருக்கிறேன். பலர் என்னை ஒரு சாகசக்காரன் என்கின்றனர். இருக்கலாம்...ஆனால் சற்று வித்தியாசமானவன், தான் நம்பும் உண்மைக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவன்.

இதுவே எனது முடிவாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களின் என் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று அறிந்திலன், மற்றபடி நான் உங்களை மிகவும் நேசித்தேன். நான் எனது செயல்களில் சிலசமயம் இருமப்போடு நடந்துகொண்டிருக்கிறேன், சிலசமயங்களில் உங்களால் என்னை புரிந்துகொண்டிருக்க முடியாது.
அது உங்கள் தவறல்ல‌. என்னைப் புரிந்து கொள்ளுதல் எப்போதும் எளிதாக இருந்ததில்லை.

நான் இப்போது ஒரு ஓவியத்தைப்போல என்னைத் தயார்படுத்தியிருக்கிறேன். எனது தன்னம்பிக்கை, நடுங்கும்
எனது கால்களையும், சோர்வுற்ற எனது நுரையீரலையும் எதிர்த்து போராடவல்லது.

20ம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அடிக்கடி நினைவு கொள்ளுங்கள்.

இந்த அடங்காப்பிடாரி தறுதலைப் பிள்ளை கடைசிமுறையாக‌ உங்களை ஆறத்தழுவிக்கொள்கிறான். ஏற்றுக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு
எர்னெஸ்டோ."

தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் "நீங்கள் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு தகப்பனாக தான்
நான் வாழ்ந்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்று கூறுகிறார். இவ்வாறு எத்தனை தகப்பன்களுக்கு
சொல்லிக்கொள்ள முடியுமோ தெரியாது. தனது பெற்றோருக்கு எழுதும் கடைசி கடிதத்தில் "நீங்கள்
விருப்பப்பட்டது போல நான் எப்போதும் நட்டந்துகொண்டதில்லை. இந்த அடங்காப்பிடாரி தறுதலைப்பிள்ளை
உங்களை கடைசியாக ஆறத்தழுவிக்கொள்கிறேன்" என்று ஒரு சிறு பிள்ளையென உடைந்து விழுகிறார்.
ஒரு குழந்தையின் பணிவோடும், ஒரு பொறுப்பு மிக்க தகப்பனாகவும் 'சே' வை தரிசிக்க வைக்கிறது இக்கடிதங்கள்.

*-----------------------------------*

சமீபத்தில் எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் நடந்த தமிழ் இலக்கியத்தை மையப்படுத்தி, அதில் ஃப்ரெஸ்கோ ஓவியம் பயிலச்செயும் செயலரங்கில் கலந்துகொள்ள வந்த ஒரு மாணவன் என் அறையில் தங்கியிருந்தான்.
பயிலரங்கில் கலந்துகொள்வோருக்கு ஐம்பெருங்காப்பியங்கள் பதிப்பு பரிசாக கொடுக்கப்பட்டது. பணி முடிந்த இரவுகளில் அதில் வரும் பாடல்களை அவனுக்கு படித்துக்காட்டி பொருள் கூறிக்கொண்டிருப்பேன். அவற்றில் சில
அவன் ஓவியமாக வரைந்து சென்றான். அறையை விட்டுச்செல்கையில் தூக்கிச்செல்ல சுமையாக இருக்கிறது என்று எண்ணியோ, இல்லை இதைவைத்து என்ன செய்வதென்று தெரியாமலோ அப்புத்தகங்களை எனக்கே
கொடுத்துச் சென்றுவிட்டான். சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை படிக்க எடுத்தேன். அது...

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்
தீதும், நன்றும், பிறர் தர வாரா
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே!
இனிது என மகிழ்ந்தன்றும்
இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடுமாறி,
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
ஆகையால்,பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! "

இதில் வரும் ஒவ்வொரு வரிக்கும் உதாரணமாகவே சே வாழ்ந்ததாக எனக்குப்பட்டது. தமிழன் சொன்ன மனிதனின் வாழிமுறையை ஏதோ ஒரு அர்ஜன்டினன் செப்பனாக வாழ்ந்துகாட்டிவிட்டான்.

*------------------------------*

பொலீவியாவில் அவர் கைப்பற்றப்பட்ட போது மிகவும் சிதிலமடைந்த ஒரு இடத்தில் சிறைவைக்கப் பட்டிருந்தார். அப்போது அவருக்கு உணவளிக்க அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடம் 'சே' "இது
என்ன இடம்" என்று கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண்மணி "இது ஒரு பள்ளி ஐயா!" என்கிறார்.

"பள்ளியா... இப்படிப்பட்ட இடத்திலா குழந்தைகள் படிக்கிறார்கள்?... எங்கள் புரட்சி வெல்லும்போது கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த பள்ளிகளைக் கட்டித்தருவோம் " என்கிறார், இன்னும் மிக‌விரைவில் அவ‌ர் செத்துவிட‌
வாய்ப்பிருப்ப‌தை தெரிந்திரிந்தும்.

அவ‌ரைத் தீர்த்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட சிப்பாய் "உன்னுடைய‌ மார்க‌ண்டேய‌த்த‌ன‌த்தை ப‌ற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாயா?". என்றான்.
அவ‌ர் "நான் புர‌ட்சியின் நிலைபெற்றிருத்த‌லைப் ப‌ற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார். "என‌க்குத்
தெரியும் நீ என்னைக் கொள்வ‌த‌ற்காக‌ தான் வ‌ந்திருக்கிறாய் என்று. சுடு கோழையே... நீ சுடுப்போவ‌து ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னைத்தான். சேகுவேராவை அல்ல‌!" என்கிறார்.

சிப்பாய் த‌னது துப்பாக்கியால் அவ‌ர‌து கால்க‌ளிலும், கையிலும் சுடுகிறான். தான் ஒலி எழுப்பிவிடாம‌ல் இருக்க‌ த‌ன‌து ம‌ணிக்க‌ட்டை இறுக்கி க‌டித்த‌ப‌டியே கீழே விழுகிறார். இந்த‌முறை குண்டு அவ‌ர‌து மார்பில் பாய்ந்து
ம‌ர‌ண‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.

'சே' கூறியதைப் போலவே மறித்தது என்னவோ 'சே' என்னும் மனிதன் மட்டுமே. "காளா! உன்னை சிறுபுல்லென மதிக்கிறேன். என் காலருகே வாடா! உன்னை மிதிக்கிறேன்... " என்கிறார் பாரதி. புரட்சியாளர்கள் எல்லாம் அடிப்படையில் ஒரே போலதான் இருக்கிறார்கள். அவரவரது கால்கள் பூமியைத் தொட்டுக்கொண்டிருப்பது மட்டுமே சிலரது இருப்பை நிரூபிக்கிறது. ஆனால் சரித்திரத்தால் எப்போதும் நிலைபெற்றிருக்ககூடிய immortality வெகுசிலராலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தனக்கும், தான் நம்பிய கொள்கைக்கும், உலகில் எந்த மூலையில் வாழும் சக மனிதனுக்கும் அன்பை செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இங்கு நம்மூரில் புரட்சி என்ற பேருக்கு மதிப்பே கிடையாது. புரட்சி என்று எதன்பெயரால் சொல்லப்படுகிறது என்று தெரியாமலே அதை சூட்டிக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் தயங்குவதில்லை. 'புரட்சி' த்தலைவர்,
'புரட்சி'த்தலைவி, 'புரட்சி'க்கலைஞர் இப்படி எத்தனையோ. இதில் ஒரு வளரும் அரசியல்வாதி ஒருவருக்கு 'தென்னகத்தின் சேகுவேரா' என்று வேறு போஸ்டர் அடிக்கிறார்கள். புரட்சியின் வாசனைகூட தெரியாத இவர்கள்,
அதை அவமதிப்பதையாவது தவிற்கவேண்டும். சில நேரத்தில் வேடிக்கையாக தான் இருக்கிறது. சாதரணமாக ஒரு தனிமனிதனுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தப்படுவதே ஒரு சாகசமாக நம்முள் அங்கீகாரம் பெறுவதான அவலம் கண்டிபாக வரவேற்கத்தக்கதல்ல.


மனித உரிமைகள் எதன் பெயரால் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத மனித உரிமைப் போராளி. சே பின்பற்றத்தக்க வாழ்கையை வாழ்ந்தாரா என்று என்னால் தீர்கமாக சொல்லமுடியாது. ஆனால் அனைவரும் வாழவிரும்பும் ஒரு வாழ்கையை வாழ்ந்துவிட்டிருக்கிறார் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் இன்னும் அனைவராலும் வசீகரிக்கப்படும் ஒப்பற்ற தலைவனாக நிலைத்திருக்கிறார்.